Showing posts with label Vishnu Temples. Show all posts
Showing posts with label Vishnu Temples. Show all posts

Thursday, February 26, 2026

கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர்.

 அந்திலி அப்பன்.



கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர்.

சில திருத்தலங்கள் பெரும் ராஜகோபுரங்களால் பிரசித்தி பெறுகின்றன.


 சில தலங்கள் அங்கு வீசும் காற்றின் அமைதியால் மனதை கொள்ளை கொள்கின்றன. 


அப்படிப்பட்ட ஒரு அபூர்வ தலம் தான் அந்திலி கிராமத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்.

சமீபத்தில் ஆதி திருவரங்க பெருமாள் கோவில் தரிசனத்திற்கு சென்றபோது, திருக்கோவிலூர் அருகே உள்ள இந்த புனிதத் தலத்திற்குச் செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

 தென்பெண்ணை கரையில் அமைந்த தெய்வீக அமைதி.


தென்பெண்ணை ஆறு அருகில், இயற்கை நிசப்தத்தில் மூழ்கிய ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது இந்த ஆலயம்.


 நகர சத்தங்களிலிருந்து தள்ளி, மனம் முழுவதும் இறைவனின் சந்நிதியில் கரையும் அளவுக்கு அமைதி நிறைந்த இடம் இது.

 கருடனின் தவமும், நரசிம்மரின் அருளும்.


ஸ்தல புராணம் மிகவும் அபூர்வமானது.

Sri மகா விஷ்ணு, பக்த பிரகலாதனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுக்கப் போனபோது, தனது வாகனமான கருடரை அழைத்து செல்லவில்லை என்கிறது கதை.

 இதனால் வருந்திய கருடர், “நரசிம்ம ரூபத்தை நான் நேரில் தரிசிக்க வேண்டும்” என்ற ஏக்கத்தில், இந்த குன்றில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.

அவரது தவத்தின் தீவிரத்தால் மூவுலகமும் உஷ்ணம் அடைந்ததாக கூறப்படுகிறது. 


தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

அப்போது  Sri மகாவிஷ்ணு, Sri மகாலட்சுமியுடன் அந்திலி வந்து, கருடரின் முன் சாந்தமூர்த்தியான லட்சுமி நரசிம்மராக காட்சி தந்தார். 


அந்த அருள்பாலிக்கும் வடிவமே இன்று இங்கு தரிசிக்கக் கிடைக்கிறது.

 கருடன் போலத் தோன்றும் பாறை:

இந்த ஆலயத்தின் மிகப் பெரிய விசேஷம் — கோவிலை தாங்கி நிற்கும் பாறை.

கருடர் தவம் செய்ததாக நம்பப்படும் அந்த பாறை, பக்கவாட்டில் பார்த்தால் கருடன் சிறகுகளை விரித்து அமர்ந்திருப்பது போலத் தோன்றும்.


 இது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தெய்வீக சின்னமாக விளங்குகிறது.

 எளிமையிலே எட்டாத அழகு:



இந்தத் தலம் திவ்யதேசங்களில் ஒன்று அல்ல. 

ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நரசிம்ம க்ஷேத்ரங்களில் ஒன்றாக பக்தர்கள் போற்றுகின்றனர்.



கர்ப்பகிரகம் சிறியது. நரசிம்மர் விக்கிரகமும் அளவில் சிறியது. ஆனால் முகத்தில் பொங்கும் கருணை, லட்சுமி தாயாருடன் சாந்தமாய் அமர்ந்திருக்கும் அந்த திருமேனி — சொல்ல முடியாத ஆனந்தத்தை அளிக்கிறது.


இங்கு ஒரு மத்வ அர்ச்சகர் பக்தியுடன் பூஜைகள் செய்து வருகிறார். எளிமை, தூய்மை, ஆன்மிக ஒழுக்கம் — மூன்றும் இங்கு தெளிவாக உணரப்படுகின்றன.


 திவ்ய அனுபவம்

தரிசனத்திற்கு முன் அர்ச்சகரிடம் கேட்டுக் கொண்டு பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்தேன்.

பின்னர் அந்த பிரசாதத்தைத் தொன்னையில் வைத்து, கோயிலின் பின்புறம் நின்ற அரசமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட்ட அனுபவம் — அது சாதாரண உணவு அல்ல; அது பரம ஆனந்தம்.

அருகில் ஒரு அனுமன் கோயிலும் உள்ளது. இத்தலம் தீராத நோய்களை தீர்க்கும் நரசிம்ம க்ஷேத்ரம் என்று பட்டர் கூறினார். நம்பிக்கையுடன் வரும் பக்தர்கள் மன அமைதியுடனும் நம்பிக்கையுடனும் திரும்பிச் செல்கின்றனர்.

 தரிசன பலன்:



இந்த இடத்தில் ஒரு விசேஷம் —
ஒருமுறை வந்தால் உடனே கிளம்ப மனம் வராது.

அமைதி, இயற்கை, அருள் — மூன்றும் ஒன்றாக கலந்து இருக்கும் தலம் இது.

நரசிம்ம பக்தர்கள் விழுப்புரம் அல்லது திருக்கோவிலூர் தங்கி,

ஆதி திருவரங்க பெருமாள் கோவில்

உலகளந்த பெருமாள் கோவில்

அந்திலி அப்பனான லட்சுமி நரசிம்மர்

என மூன்று தலங்களையும் தரிசித்து ஆன்மிகப் பலன் அடையலாம்.


Tuesday, April 30, 2024

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !

 ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !
    🌕🐘🙏🌕🐘🤚🌕🐘🤚

"மீனமர் பொய்கை நாண் மலர்
கொய்வான்,வேட்கையினோடு சென்று இழிந்த-
கானமர் வேழம், கை எடுத்து அலறக்,கரா வதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப், புள்ளூர்ந்து சென்று நின்று, ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே !"
 (பெரிய திருமொழி 2-3-9)

--"மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணும், என்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன், தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக, முதலையானது அந்த யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்."

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி அன்று நம்பெருமாள் தென் திருக்காவேரிக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் யானை கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது
இந்த உற்சவம் திருவூறல் உற்சவம் என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமியான நேற்று காலை(23/04) நம்பெருமாள் காலை 7 மணிக்குப் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 10.30க்கு தென் திருக்காவேரிக் கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார்.
பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

1.கஜேந்திர ஆனைக்கு  மோட்சம் அருளும், குட பால ஆனை !

  🙏🐘🐘🤚🐘🐘🤚🐘🐘🤚🙏

தென் ஆனாய்(திருமாலிருஞ் சோலை அழகர்),
வட ஆனாய் (திருவேங்கடவர்),
குட பால ஆனாய்(மேற்கில் திருவரங்கர்)
குணபால மத ஆனாய்(கிழக்கில் திருக்கண்ணபுரம் செளரிராஜர்)-- இமையோர்க்கு என்றும் முன்னானாய்,
பின்னானார் வணங்கும் சோதி !
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே !(திருநெடுந்தாண்டகம்-10)

மாலை 6 மணிக்குப் புறப்பட்டு காவிரிக்கரைக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் நின்று கொண்டிருந்த பெரிய கோயில் யானை ஆண்டாளுக்கு அநுக்ரஹம் செய்தார்.யானையின் சிரசில்,அர்ச்சகர்கள் நம்பெருமாளின் திருவடிகளான ஸ்ரீ சடகோபம் சாதித்தனர்.யானையின் நெற்றியில் பெருமாள் அருளித்தந்த சந்தனம் சாத்தப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் அம்மா மண்டபம் திரும்பினார்.அங்கு மங்கள ஆரத்தி ஆன பின் பொதுமக்கள் சேவை முடிந்து இரவு 8.15க்குப் புறப்பட்டு ஆஸ்தானம் அடைந்தார்.

2.நம்பெருமாள் நடையழகுக்கு ஈடாகப் பாடிய நல்லரையர்:
   🔔🔊🕪🕩🔉📢📣📯🕭
ஒரு திருவூறல் உற்சவத்தில்--சித்ரா பௌர்ணமியன்று,தென்திருக்காவேரியிலிருந்து,புறப்பட்ட போது,(ஸமரபூபாலன் என்னும் கேடயம் போன்ற வாகனத்தில்)
அரையரிடம்,"நம் நடையழகுக்கு ஈடாகப் பாடும்" என்று நியமித்தார்.அரையர் அவ்வாறே நமபெருமாளை இசையில் ஏத்திக் கொண்டு கோவில் ஆஸ்தானம் வந்தார்.2.5 கி.மீ.தூரம் பின்னோக்கி
(பின்புறம் திரும்பாமல்),
நம்பெருமாள் நடையழகுக்குத் தக்க, தாள இசையுடன் பாடிக் கொண்டு வந்தார்!!.இந்த வைபவம், இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது.

3.கஜேந்திர மோட்சம் உணர்த்தும் தத்துவம் :
    🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏
கஜேந்திராழ்வான் எம்பெருமான் திருவடிகளுக்குச் சாற்றுகைக்காகத் தாமரை மலர் பறித்த போது,முதலை கஜேந்திரன் காலைக் கவ்வித் துன்புறுத்தியது.அது போல,
எம்பெருமான் மீது பக்தி கொண்டுள்ள  நம்மை ஐம்புலன்கள்(கண்,வாய்,மூக்கு,
காது,மெய்(உடம்பு) ஆகியவை தங்கள் ஆயுதங்களான காட்சி,சுவை/வாக்கு,மணம், ஒலி,ஸ்பர்ஸம்  ஆகியவற்றின் மூலம்  அடிமைப் படுத்தி) என்னும் முதலை கவ்வித் துன்புறுத்துகிறது.
கஜேந்திரன்"நாராயாணா! ஓ!மணி வண்ணா!! நாகனையாய்!! வாராய்! என் ஆரிடரை நீக்காய்"என்று  ஓலமிட்ட போது,எம்பெருமான் ஓடோடி வந்து காப்பாற்றியது போல,நாமும் எம்பெருமான் திருவடிகளில் சரணடைந்து,அவன் நாமங்களைப் பக்தியுடன் சொன்னால் கடுக வந்து,
 அந்தக் கொடிய ஐம்புலன் பிடியிலிருந்து,நம்மை விடுவித்து உய்விப்பார்

கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர்.

 அந்திலி அப்பன். கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர். சில திருத்தலங்கள் பெரும் ராஜகோபுரங்களால் பிரசித்தி பெறுகின்றன...